Thursday 7 June 2012

கல்லூரி கிறுக்கல்கள்

எங்கள் கல்லூரி சீனியர்களின் பொழுதுகளை வெவ்வேறு தருணங்களில் குறித்து இருந்தேன் அவற்றின் தொகுப்பு இது !

கடைசி சொற்கள் ஒவ்வொரு இடத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன இல்லையா ?மாபெரும் இசைகலைஞன் எல்விஸ் பிரிஸ்லீ "நான் உங்களை மகிழ்வாகவே வைத்து இருந்தேன் என நம்புகிறேன் !"என்ற பொழுது அவனின் இசையின் இளமை வேகம் அதில் தெரிகிறது ;மாபெரும் போராளி மால்கம் எக்ஸ் "சகோதரர்களே அமைதியாக இருங்கள் !"என சொன்னபொழுது மரணம் துப்பாக்கி முனையில் அவனை நெருங்குகிறது என அவனுக்கு தெரியும் ;வறுமையிலேயே சாவை நெருங்கிய ஓ ஹென்றி"விளக்கை போடுங்கள் !நான் என் சொந்த தாய்வீட்டிற்கு போகும் பொழுது இருட்டாக இருக்கலாமா ?"என ஆவல் தொனிக்க கேட்டதை என்ன என சொல்வது ?கடைசி வார்த்தை என்பது எதையும் சொல்லாத முட்டாள்களுக்கு தான் !எனக்கில்லை வெளியேறுங்கள் மூடர்களே!" என்ற மார்க்சின் அளவில்லா சிந்தனைப்பெருக்கின் உச்சத்தை நினைத்து நினைத்து வியக்கிறேன்.என் கேள்வி எல்லாம் மரணத்தை விடுங்கள்,கல்லூரி கடைசி நாளில் . உங்கள் உற்றவர்களிடம் உங்கள் இறுதி வார்த்தை என்னவாக இருக்கும் .இருந்து இருக்கிறது ?"போய் வருகிறேன் என்றா ?"..."என்னால முடியலைடா" என்றா ,"மச்சான் மறந்துடாதே" என்றா ?"அழாதே" என்றா எது எது ?


ஏற்கனவே கல்லூரி கடைசி நாளும் கடவுளின் திரும்பி பார்த்தலும் கவிதை படித்து கண்ணீர் விட்டோம் என என்னுடைய சீனியர்கள் பலர் சொன்னார்கள்;இந்த நிலையில் பிரியப்போகும் நட்பில் என்னவெல்லாம் சொல்லாமல் விட்டு விடுவோம் என எண்ணி நான் எழுதிய இந்த புதுக்கவிதையால் இன்னமும் பலரின் கண்கள் கலங்கி இருப்பது புரிகிறது அவர்களின் குறுஞ்செய்திகளில் !அழுங்கள் ...இனி இதை எல்லாம் காண எங்களுக்கு கொடுப்பினை கிடையாதே !அன்பிற்காக அழுதல் ஆனந்தம் !அதிலும் அதை எழுதுபவனுக்கு பேரானந்தம் ...நான் இதை சாவகாசமாக எழுதிவிட வில்லை ஜெயகாந்தன் ஒரு வரி எழுதி இருப்பார் சில நேரங்களில் சில மனிதர்களில் ,"ஒரு கதாப்பாத்திரத்தை சாகடிக்கிற பொழுது கதாசிரியன் மற்ற எல்லாரையும் விட அதிகம் கதறி இருப்பான்!".அதே தான் என் நிலையும் !

அழகான பல அனுபவங்களை கடைசி கல்லூரி நாட்கள் எல்லாருக்கும் பரிசளிக்கிறது !இரவில் கிரிக்கெட் விளையாடும் சீனியர்களை காரணம் கேட்க முடியவில்லை ;அவர்களின் இறுதி சில பொழுதுகள் அல்லவா இவை ?சுரங்கவியல் துறையில் சமீபத்தில் நடந்த சம்பவம் நெஞ்சை உருக வைத்து விட்டது.ஸ்ரீனிவாசன் எனும் மூத்த பேராசிரியர் அவர்.ஒற்றை பார்வையாலே பயத்தை விதைப்பவர் என்கிற அளவிற்கு கெடுபிடிக்காரர் எனப்பெயர் எடுத்தவர்.அவர் சொல்கிற வார்த்தைகள் தவறை உருவி எடுத்து கையில் கொடுக்கும்.FAREWELL கொடுக்கப்பட்ட பொழுது அவரும் வந்து இருக்கிறார்.தன் பிள்ளைகள் போன்ற கடைசி ஆண்டு பிள்ளைகளுக்கு தன் கையால் கேக் எடுத்து ஒவ்வொருவருக்கும் அவ்வளவு வாஞ்சையோடு ஊட்டி இருக்கிறார்.அதையே மூன்றாம் ஆண்டு பிள்ளைகளுக்கும் செய்து இருக்கிறார்.மென்மையாக தட்டிக்கொடுத்த பொழுது அந்த கரடுமுரடான மனிதருக்குள் இருக்கும் நெகிழ்வு தெரிந்து இருக்கிறது .பலரின் கண்கள் கலங்கிய பொழுதும் அதே கம்பீரப்பார்வை அன்பு கனிந்த பார்வையாக பாய்ந்து இருக்கிறது.#உலகம் சுழல்வதற்கு ஆயிரம் காரணங்கள் அறிவியல் சொல்லலாம் ,ஆனால் அன்பே காரணம் என்பேன் நான் !

 அன்பான ஒரு நாள் இன்றைக்கு !நான் எப்பொழுதும் மனதுக்கு இணக்கமானவர்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பதற்கு முன் அதை முழுதும் வசித்து அது அவர்களுக்கு தர உகந்ததா என பார்த்தே தருவேன் !அப்படி இன்று புத்தகத்தை பரிசளித்த அண்ணன் ரொம்பவே ஸ்பெஷல் !நாங்கள் எப்பொழுது பேசினாலும் அதில் தீப்பொறி பறக்கும் !ஆனால் அதில் வன்மம் இருக்காது !திடீர் என ஒரு நாள் ,"நீ ரொம்ப நல்ல பையன்டா!நாங்க அப்பப்ப பிரெண்ட்ஸ் பேசிக்கிட்டு இருக்கப்ப நீ வந்தா கோவம் வந்துடும் அவ்ளோ தான் ...ஹர்ட் பண்ணி இருந்தா சாரி !"என்றார்.இது போல ஒரு பத்து சீனியர்கள் சொல்லி விட்டார்கள் !ஆனால் உண்மையில் இவர்கள் யார் மீதும் எனக்கு எவ்வகையான வெறுப்பும் ஏற்பட்டது இல்லை !எல்லோரும் அன்பின் உச்சங்கள் !அதை வெளிப்படுத்துவதில் தான் சிக்கல்.அது எல்லாருக்கும் உள்ளது தானே !எல்டொராடோ எனும் சுஜாதாவின் கதையில் பல வருடம் கழித்து மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையின் கரம் பதித்து எட்டு வருடம் பிரிந்துபோன மகன் கண்ணீர் மல்க பேசுவான் !தந்தை நிம்மதியாக உயிர் விடுவார் !இந்த கல்லூரியின் மீது உள்ள பந்தம் என்றைக்கும் அற்றுப்போய் விடக்கூடாது என இவர்கள் படுகிற அக்கறை என்னை மலைக்க வைக்கிறது .அந்த தந்தையின் மறைவை போல தான் இவர்களின் கல்லூரி கடைசி நாள் அமையும்,இல்லையா ?

இதை விட நீண்ட நெடிய உரைகளை .இதை விட பத்துமடங்கு பெரிய கூட்டத்திடம் உரையாற்றி இருக்கிறேன் !ஆனால் இன்றைக்கு என் துறை சீனியர்கள் முன் பேசிய ஏழு நிமிடத்தை போல நிறைவாக வெகு சில கூட்டங்களில் உணர்ந்து இருக்கிறேன்.இன்றைக்கு பிரிவு உபசார விழாவின் பொழுது ஒவ்வொருவரின் கண்ணிலும் பிரிவின் சாயல் சத்தமில்லாமல் படர்ந்தது,விளையாட்டுகள் நடந்த பொழுது தோற்றவரும் ஜெயித்தவரும் இல்லாத சமநிலை அவர்கள் முகத்தில் குடிகொண்டுஇருந்தது,கிண்டலடிக்கும் ஒளிக்கோர்வை படர்ந்த பொழுது அதன் ஏளனம் அவர்களை ஏகாந்தம் போல தாக்கியது அவர்கள் முகத்தில் தெரிந்தது ,தங்கள் தோழமைகள் பற்றி சொல்லும் பொழுது அவர்கள் எவ்வளவு குமுறி இருப்பார்கள் என புரிந்தது ,பலர் வார்த்தைகள் இல்லாமல் அவதிப்பட்டாலும் அவர்களின் மொழி அனைவருக்கும் புரிந்தது புதுமை ,என் கவிதை அவர்களின் கண்ணீரில் மேலும் புனிதம் அடைந்தது ,இறுதில் மெழுகின் ஒளியில் நட்பின் பாடல்களில் அவர்கள் அழுது எங்களை தழுவிக்கொண்ட பொழுது இப்படி ஒரு பிரிவு உபசார விழா வேறு யாருக்கும் எங்கள் கல்லூரியில் வாய்த்து இருக்காது என எங்களுக்கு புரிந்தது ;பலர் கைகுலுக்கிய பொழுது இல்லாத யார் மீதோ கோபம் கோபமாக வந்தது !ஒரு வேளை அவர்கள் நம்பும் கடவுள் மீதாக இருக்கலாம்

அண்ணனிடம் அளித்து இருந்த ஸ்லாம்புத்தகம் வெகுநாட்கள் கழித்து தான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது !அதில் என்னைப்பற்றி அச்சுப்பிசகாமல் அவ்வளவு அழகாக எழுதி இருந்தான் !எனக்கு ஆச்சரியம் ஒரே பாசிடிவ் ஆன தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது அதில் !காரணம் கேட்ட பொழுது,:கல்லூரியை விட்டு போகப்போகிறோம் !எதுக்காக யார் மனதையும் புண்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் !வாழ்க்கையில மறக்க முடியாத திரும்பவே வராத கட்டம் இதுடா!ரொம்பவே மிஸ் பண்ணபோறோம் இதை எல்லாம் !"என்றார்.ஒவ்வொரு ஸ்லாம்புத்தகத்திலும் என்ன எழுத எண்ணி இருப்பார்கள் கல்லூரியை விட்டு பிரிகின்ற நண்பர்கள் !அவர்களின் நட்பிற்கு நன்றியா,பிரிவின் கண்ணீரை சொல்லும் சோக வரிகளையா?திரும்பவே வராத ஓசி வாழ்க்கையா?இந்த பருவத்தின் மிச்சங்கள் என்றைக்கும் பழுப்பேறிப்போன ஸ்லாம்புக்கை போல அழகானதாக,ரம்மியமானதாக,சலனப்படுத்த போகிறது !கல்லூரி கடைசி நாள் சொர்க்கத்தின் இறுதி நாள்,அவர்கள் சொல்லாமல் விட்டதை அந்த வெறுமையான தாள்கள் சொல்லுமோ என்னமோ #ஸ்லாம்புக் சோகம்

டிகிரி வாங்கிக்கொண்டு மஞ்சள் உடை அணிந்து கொண்டு பல்வேறு படங்களுக்கு போஸ் கொடுத்தப்பொழுது அருகில் இருந்த நான்காமாண்டு அண்ணன் ஒருவர் அடித்த கமென்ட் இன்னமும் எதிரொலிக்கிறது ,"இந்த ஒத்தை தாளோடு இந்த கல்லூரிக்கும் உனக்கும் உள்ள தொடர்பு அந்து போச்சுன்னு சொல்றாங்க இல்ல ?"என கேட்ட பொழுது அடுத்தது நாங்கள் அதற்கடுத்தது நீங்கள் என அவரின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வதாகபட்டது எனக்கு .எவ்வளவோ உறவுகளை கடந்த போனாலும் கல்லூரியும் நம் நண்பர்களில் ஒன்றாக இருந்து இருக்கிறது.எத்தனை நட்புகளை இமைக்கொட்டாமல் கண்டு இருக்கிறது ,எத்தனை காதலர்களின் கைவருடல்களை வெட்கப்படாமல் கடந்து இருக்கிறது ,எத்தனை கத்தல்களை கதை பொத்தாமல் கேட்டு இருக்கிறது,கடைசியில் அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பை முறிக்கும் சோக தினத்தை எவ்வளவு கோலாகலமாக கொண்டாடுகிறோம் #முரண்

என்னவோ இப்போதெல்லாம் கண்ணில் படுபவை எல்லாம் மனதை பிசைகின்றன ...இன்றைக்கு மைதானத்தில் சீனியர்கள் கிரிக்கெட் ஆடுவதை பார்த்தேன் ...அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?இது வரை ஸ்கோர் வைத்து கொண்டு ஆடிய புண்ணியவான்கள் இன்றைக்கு சும்மாவே ஓயாமல் விளையாடி கொண்டு இருந்தார்கள் ...."இன்னும் கொஞ்ச நாள் தானே மச்சி !அப்புறம் இங்க விளையாட முடியாதில்லே ?"என ஒருவர் கேட்ட கேள்விக்கு,தலையில் தட்டி சிரித்தார் மற்றொருவர் ..அது என்னமோ பிரிவின் உச்சபட்ச வெளிப்பாடாக பட்டது எனக்கு !


என் சீனியர்களின் வாழ்க்கையை பார்த்து வியக்கிறேன் கல்லூரியில் ...இறுதி ஆண்டுகளில் இருக்கிற பொழுது தங்களின் போதிமரங்கள் ஆன கல்லூரியின் பச்சை பெஞ்சுக்களில் பொழுதை கழிக்கிறார்கள் ...இரண்டே வகுப்புகள் இருந்தாலும் கல்லூரியை மீண்டும்,மீண்டும் வளம் வருகிறார்கள் ...அன்பை பரிமாறுகிறார்கள் ...கண்களில் கவலை பொங்க சிரிக்கிறார்கள்,கண்ணீரை மெதுவாக மறைத்து கொள்கிறார்கள் ...அவர்களை இந்த கல்லூரியின் கேலரிக்கள் இழந்து நிற்கும் ...farewell கலாசாரம் இந்த கல்லூரியில் இல்லாமல் இருக்கிறது ...ஆனாலும் ,நெகிழ்வும்,நட்பின் மிச்சங்களும் இவர்களிடம் கொட்டிகிடைக்கிறது ...அடுத்தது நீங்க தான் என சொல்லாமல் சொல்கிறதோ இவர்களின் கல்லூரி இறுதி நாட்கள் #நட்பும்,பிரிவும்

No comments:

Post a Comment